மரபுக்கவிதைகள் -கடம்பூரன்
மரபுக்கவிதைகள்!
-கடம்பூரன்
1. நாம் மறக்க மாட்டேமால்!
நானே தானே ஏமாந்தேன் 
                  மானே தேனே என்றானே
நன்றும் தீதும் நானறியேன் 
                   இன்றும் என்றும் பொய்யறியேன்
கன்றும் ஆவும் தானறியும் 
                      உன்னை என்றும் நான்மறவேன்
அன்பை என்றும் மறக்காதே 
                       இன்பம் என்றும் துறக்காதே
                   2.    ஓ நெஞ்சே!
ஓநெஞ்சே நீதானே என்றென்றும்
                              என்தோழன்; எந்தன் கடவுள்
பூப்போன்ற என்னெஞ்சே புத்தின்பம்
                              கொள்வாயே என்றும் புதிதாய்!
கேடொன்று செய்தாலோ ஓடென்று
                       சொல்வாயே ஓய்வே இலாமல்!
ஏதேனும் நன்மையைச் செய்தாலோ
                          என்னையே பாராட் டுவாயே!
           3 .நண்பா!    வா!     வா!
அன்பருள் நண்பா வாவா
                            இன்பருள் தோழா வாவா
நன்பொருள் தாதா தாதா
                                  வன்பொருள் நீதா நீதா
மன்னவன் நீயே நீயே
                          என்னவன் தானே நீயே
உன்னவன் நானே நானே
                            உன்னடி உய்ந்தேன் தானே
4. ஈடுபடு!
ஈடுபாடு இல்லாமல் எச்செயலும் செய்துழன்று 
மாடுபடும் துன்பமாய்த் துன்புற்று -வாடாமல் 
பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய்த் திட்டமிட்டு 
ஈடுபட்டுச் செய்வதே மேல்!
5.ஏங்கி இளையாது இரு!
எதிர்பார்ப்பு இல்லாமல் ஏங்காமல் என்றும் 
எதிர்வரும் தொல்லையை ஏற்றால் -எதிரியும் 
இல்லாமல் என்றுமே இன்பமாய் வாழ்ந்திட 
நில்லாமல் ஓடும் கலி!
6.என் ஆசான் பழ.முத்துவீரப்பர் மணிவிழா!
மணிவிழாக் காணுகின்ற முத்துவீ ரப்ப 
அணிமலர் கொண்டுன் அடியிணைகள்-வாழ்த்தி 
உமையும் சிவனுமாய் வாழ்வும் வளமும் 
அமைந்திட வேண்டினேன் நான்
7.என் குருநாதன்
பசியுடனே பட்டலைந்தேன் காதுவற்றிச் செத்தேன் 
புசியுடனே என்றுதமிழ் தந்தாய்-வசிட்டரே 
செஞ்சிவனின் வார்சடையில் தங்குசிவச் சந்திரரே 
அஞ்சுமிவன் புன்தலைவை தாள்.
8.அவையடக்கம்
அறியாச் சிறுவனென்றன் அன்பற்ற சொற்கள் 
சிறியப் பொருள்களெல்லாம் சான்றோர்-அறிவாரே 
கன்னல்போல் தித்திக்கும் பிள்ளை மழலையை 
அன்னை வெறுப்பதுண் டோ?
                                                  9.இறை
இகழுடம்பு    போகத்தான்    போகுமாமே நல்லதாமே
புகழுடம்பை பூமியிலே போக்கா   -  நிகழ்த்திட்டால் 
செத்தபின்னும் சாகாமல் நின்றிருப்பாய்         
                                                                     செஞ்சிவன்மேல் 
பித்தமுடன் பக்தியோடு வாழ்!
10.நன்றின்பால் உய்ப்பது…
நல்லவனாய் நீயிருந்தால் இன்புற் றிருப்பாய் 
அல்லவனாய் நீயிருந்தால் துன்புறுவாய்-வல்லவனாய் 
நன்மையும் தீமையும் நாடி யுணர்ந்து 
நன்மையில் வாழ்ந்திடு நன்று
11.தெய்வங்கள்!
இம்மையில் உம்மை மறப்பேனோ கல்விதந்த
அம்மையே அப்பனே ஆசானே -உம்மை
மறந்தால் உயிர்வாழ்வேன் என்றில்லை நெஞ்சே!
இறந்தாய் எனவே இரு!
12.வரலாறு கல்! எழு!
வாழ்ந்த கதையும் முறையாய் அரசாண்டு 
வீழ்ந்த கதையும் வரலாறும் -தாழ்ந்த 
தமிழா அறியாய் வரலாறு கற்று, 
அமிழாதே மீண்டும் எழு!
13.நன்றி
எட்டி உதைத்தாலும் ஏசிடினும் பேசிடினும் 
விட்டுப்போ என்றுகை விட்டாலும்-மட்டின்றி 
நாய்கூட எச்சிலுண்டு நன்றியுடன் வாலாட்டும் 
சேய்கூட மிச்சிலுண்டேன் அன்று. 
14.மனதை மாற்ற வழி?
உலகத்தில் மக்களெல்லாம் ஒன்றென்றே விதிகள் 
இலக்கியங்கள் ஆக்கிவிட்டோம் பயனென்?-விலங்கினமாய் 
எங்கெங்கும் தம்முள்ளே போரிட்டு வீழ்கின்றார் 
எங்கே தவறு இயம்பு?
15.மாணவருக்கு
கண்டிக்க முற்படும் கல்விசேர் ஆசிரியன்
தண்டிக்க முற்படும் தந்தையாம்-பண்புடையாய்
அண்டிவாழ் ஆசானைக் கண்டு தொழுதிட்டால்
உண்டுகாண் வீடெனும் பேறு
 
Comments
Post a Comment